Wednesday, September 11, 2013

 

 'மறந்து கொண்டே இருப்பது  மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே  இருப்பது எம் கடமை"

  இன்று பாரதி நினைவு தினம்.!

1.
தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச்
      சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ?-அதற்குப்
      பாத்திர மாவாயோ?
(தொண்டு)

2.

ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள்
      சமயச் சண்டை போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்!-கண்முன்
      நிற்கொ ணாது போடா!
(தொண்டு)

3.

அச்சம் நீங்கி னாயோ?-அடிமை!
      ஆண்மை தாங்கி னாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை
      பேணுத லொழித் தாயோ?
(தொண்டு)

4.

கப்ப லேறு வாயோ?-அடிமை!
      கடலைத் தாண்டு வாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே-அடிமை!
      கொற்றத் தவிசுமுண் டோ?
(தொண்டு)

5.

ஒற்று மைபயின் றாயோ?-அடிமை!
      உடம்பில் வலிமையுண் டோ?
வெற்றுரை பேசாதே!-அடிமை!
      வீரியம் அறிவாயோ?
(தொண்டு)

6.

சேர்ந்து வாழு வீரோ-உங்கள்
      சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள்
      சோம்பரைத் துடைத்தீரோ?
(தொண்டு)

7.

வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி
      வெருவலை ஒழித்தாயோ?
உள்ளது சொல்வேன் கேள்-சுதந்திரம்
      உனக்கில்லை மறந்திடடா!
(தொண்டு)

8.

நாடு காப்ப தற்கே-உனக்கு
      ஞானம் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப் போடா!-அடிமை!
      வேலை செய்யப் போடா;
(தொண்டு)

9.

சேனை நடத்து வாயோ?-தொழும்புகள்
      செய்திட விரும்பாயோ?
ஈன மான தொழிலே உங்களுக்கு
      இசைவதாகும் போடா!
(தொண்டு)

No comments: