Wednesday, January 13, 2016

கள்ளம் இல்லா உள்ளமிருந்தால்
எல்லா நாளும் பொங்கல்தான்!


பொலிவுடனே பொங்கட்டும்
இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும்
நிம்மதி நம் வீட்டில்!

பொல்லாத குணத்தை எல்லாம்
போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள்
இரவல் வாங்கி சேமிப்போம்!

உழவு இன்றி உலகம் இல்லை
என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே
உறுதியேற்று உதவுவோம்!

கதிரவனின் கருணைக்கு
நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும்
களிப்புமிகு நாளிது!

வெல்லம் அரிசி ஒன்றாய் சேர்ந்து
சொல்லும் செய்தி ஒன்றுதான்!
கள்ளம் இல்லா உள்ளமிருந்தால்
எல்லா நாளும் பொங்கல்தான்!

தைமகளின் பிறந்தநாளை
தமிழ் மணக்க போற்றுவோம்!
பகலவனை வணங்கும் நாளில் 
அனைவரையும் வாழ்த்துவோம்!

No comments: