Wednesday, November 13, 2013

இன்னும் ஒரு ஊழல் நடக்கபோகிறதாம்!

சொல்கிறார் யஸ்வந்த் சின்ஹா!!

தொலைத்தாடர்புத் துறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மற்றொரு ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது' என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதம்: அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான அடிப்படை விலையை மிகவும் குறைத்து மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி 1,800 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கான ஒதுக்கீட்டில், ஒரு மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் விலை ரூ.2,376 கோடியில் இருந்து ரூ.1,496 கோடியாக சுமார் 37 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மும்பை, தில்லி போன்ற முக்கிய தொலைத்தொடர்பு வட்டங்களில் இந்த விலை சுமார் 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அலைக்கற்றை விலை தொடர்பாக தொலைத்தொடர்பு ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில் பெருநகரங்களில் சுமார் 25 சதவீதமும், "ஏ' (1,800 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் "பி' (900 மெகா ஹெர்ட்ஸ்) பிரிவு தொலைத்தொடர்பு வட்டங்களுக்கு குறைவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அடிப்படையில் வரும் காலத்தில் அலைக்கற்றையை ஏலத்தில் விட்டால் அரசுக்கு ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இந்த நடவடிக்கையால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் லாபம் கொழிக்கும்.
கடந்த ஆண்டு நவம்பரிலும் இந்த ஆண்டு மார்ச் மாதமும் அலைக்கற்றை வளங்கள் ஏலத்தில் விடப்பட்டபோது தனியார் நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு அதிக விலைக்கு அலைக்கற்றையை யாரும் வாங்க முன்வராத நிலையை உருவாக்கின. எனவே, முறையாக நடைபெறாத ஏலத்துக்கு தொலைத்தொடர்பு வளர்ச்சியின்மையை காரணமாகக் கூறக் கூடாது.
தொலைத்தொடர்புத் துறையில் இந்தியா அபாரமாக வளர்ந்து வருகிறது. இந் நிலையில், தேசத்துக்கு சொந்தமான வளங்களை விலையாகக் கொடுத்து, மீண்டும் தனியார் நிறுவனங்கள் லாபம் கொழிக்க அனுமதிக்கக் கூடாது. அது இன்னொரு ஊழலுக்கான வாய்ப்பாக அமைந்து விடும்.
எனவே, நாட்டு நலன் கருதி இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். அலைக்கற்றையின் பொருளாதார மதிப்பை உணர்ந்து, அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய வேண்டும். அலைக்கற்றை விவகாரத்தில் மேலும் ஒரு ஊழல் தலையெடுக்காமல் தடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் யஷ்வந்த் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.

No comments: