Monday, November 9, 2015


பற்ற வைத்தால் வெடித்துக் கரியாகும் 
பட்டாசுக்கு செலவிடும் பணத்தை 
பசியுற்ற மக்களுக்கு பிரித்தளித்து 
ஏழையின் சிரிப்பில் காண்பதே ஏற்றமிகு தீபாவளி ! 

பலவித பலகாரங்கள் பக்குவமாய் செய்து 
சுற்றம்நட்புடன் பகிர்வதற்கு பதிலாக 
சிலவறியோர் குடிசை கதவுதட்டி 
இன்முகத்துடன் தருவதே தித்திக்கும் தீபாவளி ! 

உறவுகளுக்குள் மனக்கசப்பு உண்டெனில் 
நல்ல நாளில் நாடிப்போய் 
விரிசலால் பிரிவு வருமுன்பே 
உறவை புதுப்பிப்பதே உன்னத தீபாவளி ! 

சொந்தம் ஒதுக்க அனாதைஇல்லம் அரவணைக்க 
அன்பிற்கேங்கும் ஆதரவற்ற முதியோரின் 
நொந்த உள்ளம் ஆறுதலுற பேசி 
பொழுதுபோக்கும் காலமே பொன்னான தீபாவளி ! 

தொலைக்காட்சியின் உத்தியால் ஈர்க்கப்பட்டு 
விழியில் விளக்கெண்ணெய் விட்டவாறு 
விலைமதிப்பில்லா நேரத்தை தொலைக்காமல் 
வீட்டாருடன் உறவாடுவதே உல்லாச தீபாவளி ! 

வாழ்த்துக்களை வார்த்தைகளால் பரிமாறி 
வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர 
வருகின்ற தீபஒளி திருநாளில் 
தீயன கழித்து நல்லன கூட்டுவதே உண்மையில் தீபாவளி .....!!! 

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !

No comments: